பிரச்னைகளை பார்த்து கலக்கம் அடைவதை விடுத்து, பிரச்னையில் இருந்து விடுபட கொஞ்சம் மாற்றி யோசித்த சக்கிமங்கலம் கிராம வாசிகள் இன்று அதற்கான பலனையும் அடைந்துள்ளனர்.
மின்வெட்டு காரணமாக கிணறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தி பல்வேறு நோய்களுக்கு ஆளான மக்கள் மாற்றுவழியைக் கையாண்டு சுகாதாரமான நீரை பெற்றுவருகின்றனர்.
மதுரையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சக்கிமங்கலம் கிராமம். சுமார் 12 ஆயிரம் மக்கள் வசித்து வரும் இங்கு, சில மாதங்களுக்கு முன்பு வரை மின்தட்டுப்பாடு காரணமாக சுகாதாரமான குடிநீரை வழங்கமுடியாத நிலை இருந்தது.
பல்வேறு நீர் நிலைகளிலிருந்து சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தியதால், யானைக்கால் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகினர் இவ்வூர் மக்கள். இதிலிருந்து மக்களை விடுவிக்க சுகாதாரமான குடிநீர் வழங்குவது ஒன்றே சிறந்த வழி என உணர்ந்த இவ்வூராட்சி மன்றம், சூரிய ஒளி மின்கலம் மூலம் மின்மோட்டார்களை இயக்கி இருபத்தி நான்கு மணிநேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சூரிய மின்கலம் மூலம் 1.6 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கிறது. இதனால் இந்த ஊராட்சியின் மின்கட்டணமும் பன்மடங்கு குறைந்துள்ளது. மின்பற்றாக்குறை காரணமாக குடிநீருக்காக மக்கள் தவித்த காலம் போய், தற்போது 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாற்று வழியைக் கையாண்டு கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தந்ததில் முன்மாதிரியாகத் திகழ்கிறது சக்கிமங்கலம் கிராமம்.
மக்களின் வாழ்க்கைக்கு தேவையான குடிநீரை வழங்குவது அரசின் கடமை என்பதை சக்கிமங்கலம் ஊராட்சி மன்றம் உணர்ந்துள்ளது.
இந்த நிலைமை எல்லா கிராமங்களிலும் பரவ வேண்டும்.