மதுரையில் முறைகேடு தொடர்பாக சீல் வைக்கப்பட்ட கிரனைட் அலுவலகத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போய் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே திருடு போனது உண்மையா என்பது தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரனைட் முறைகேடு தொடர்பாக கடந்த வருடம் மேலூரில் பன்னீர் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது கிரனைட் நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. பிறகு ஜாமீனில் வெளியில் வந்த அவர் சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில், சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அங்கிருந்த தொலைக்காட்சி, கம்யூட்டர்கள் மற்றும் இயந்திரங்களின் உதிரிபாகங்கள் என சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக அந்த நிறுவனத்தின் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது
-தேனி முருகேஸ்வரன்.