டீசலுக்கு மத்திய அரசு இரட்டை விலை விதித்துள்ள நிலையில், இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டீசலுக்கு இரட்டை விலை விதிக்கும் நடைமுறையை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி மாநில போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்க உறுப்பினர் ஜீவன் மூர்த்தி பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் கே என் பாஷா மற்றும் தேவதாஸ் அடங்கிய அமர்வு, இதுகுறித்து விளக்கம் தருமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு 4 வாரகால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட, மொத்தமாக டீசல் கொள்முதல் செய்பவர்களுக்கு, லிட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் 80 காசு வசூலிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் தொடங்கின.
இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் ரயில்வே துறைகளின் நிர்வாக செலவு அதிகரித்து அதனால் கட்டண உயர்வுகள் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க இரட்டை விலை முறையை கைவிட வேண்டும் என, தமிழக அரசு உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
-தேனி முருகேஸ்வரன்.