மதுரை அருகே, மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இருவரும், மேலூரை அடுத்த குலமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றிய விஜயகுமார் மற்றும் ஆங்கில ஆசிரியர் தரண் ஆவார்கள்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். குலமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல் தருவதாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம், மாதர் சங்கம் சார்பில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.
அதில், ஆசிரியர்கள் இருவர் மீதும் கூறப்பட்ட புகார் உண்மை என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய அவர் உத்தரவிட்டார்.
-தேனி முருகேஸ்வரன்.